Last Updated : 13 Feb, 2021 06:03 PM

 

Published : 13 Feb 2021 06:03 PM
Last Updated : 13 Feb 2021 06:03 PM

சீனாவின் பெயரை சொல்லக் கூட மோடி அஞ்சுகிறாரா?- கார்த்தி சிதம்பரம் கேள்வி

காரைக்குடி

‘‘சீனாவின் பெயரைச் சொல்லக்கூட பிரதமர் மோடி அஞ்சுகிறாரா?’’ என எம்பி கார்த்தி சிதம்பரம் எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி 33-வது வார்டில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்.பி கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவகாசி பகுதியில் தொடர் வெடி விபத்துகளை தடுக்க தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும். உலகத் தரமிக்க பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பற்ற பழைய முறையிலேயே தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

தொழிற்சாலைகளை நவீனப்படுத்தத் தேவையான சலுகைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். மேலும் பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோருக்கு அதிக தொகைக்கு காப்பீடு இருக்க வேண்டும். அதற்காக தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கித் தர வேண்டும்.

இந்தியா, சீனா எல்லையில் என்ன நடக்கிறது என்ற உண்மையை பிரதமர் மோடி இதுவரை சொல்லவில்லை. சீனா என்ற வார்த்தையை கூட அவர் உச்சரிப்பதில்லை. அஞ்சுகிறாரா? என்ற சந்தேகம் உள்ளது.

அதனால் உண்மை நிலையை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

பெட்ரோலுக்கு மத்திய அரசு செஸ்வரி விதித்துள்ளது. மற்ற வரிகளை மாநிலத்திற்குப் பங்கிட வேண்டும். ஆனால் செஸ் வரியை பங்கிடத் தேவையில்லை.

முழுமையாக மத்திய அரசே வைத்துக் கொள்ளலாம். மத்திய அரசு பொருளாதாரம் நடத்தும் விதத்தைப் பார்க்கும்போது பெட்ரோல் விலை குறைய வாய்ப்பில்லை.

மத்திய அரசுக்கு இந்திய மக்களின் மீது அக்கறை கிடையாது. வரிச்சுமையை கூட்டிக் கொண்டே செல்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே சிறிய விலை உயர்வுக்குக் கூட ‘மாட்டு வண்டியில் போகிறோம்’ என்று ஷோ காட்டினர். பல போராட்டங்களை நடத்தினர். தற்போது பெட்ரோல் ரூ.100-ஐ எட்டிவிட்டது.

இதனால் சாதாரண மக்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் பேசுகிறது. ஊடகங்கள் எங்களது பேட்டிகளை வெளியிடுவதில்லை. இருட்டடிப்பு செய்கின்றனர்.

நியூஸ் கிளிக் பத்திரிக்கை மத்திய அரசின் அவலங்களை சுட்டிக்காட்டியது. ஆனால் அங்கு தொடர் சோதனை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி எதற்கும் அஞ்சுவதில்லை. உரக்க சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், ஊடகங்கள் தான் பயப்படுகின்றன, என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x