Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

ஓபிஎஸ் இளைய மகனும் அரசியலில் களமிறங்குகிறாரா?

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன். ப.ஜெயபிரதீப், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தேனிமாவட்ட அதிமுக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், தேனி மாவட்டத்தில் அதற்கான களப் பணிகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ப. ஜெயபிரதீப் போட்டியிடலாம் என்ற கருத்து அக்கட்சி வட்டாரங்களில் பரவி வருகிறது. இதற்கான களப்பணியும் நடந்து வருகிறது.

சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள சசிகலாவால் ஏற்படும் அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப, இவர் போட்டியிடுவது உறுதி செய்யப்படும் என்கின்றனர்.

போடி தொகுதியில் ஜெயபிரதீப் போட்டியிட்டால், ஓ. பன்னீர்செல்வம் வேறு தொகுதிக்கோ அல்லது கட்சி சாராத பெரிய பதவிக்கோ செல்ல வாய்ப்புள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.

ஆனால், அதிமுக நிர்வாகிகள் இதை மறுத்து வருகின்றனர்.

அவர்கள் கூறுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் தனது சகோதரர் ப. ரவீந்திரநாத் வெற்றிக்காக ஜெயபிரதீப் தீவிரமாகக் களப் பணியாற்றினார். அதேபோல, வரும் தேர்தலில் போடி தொகுதியில் தனது தந்தையின் வெற்றிக்காக கடந்த 2 மாதங்களாக பல்வேறு அமைப்பினர், சங்கத்தினரைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதை வைத்துதான், அவர் போட்டியிடப் போகிறார் என்று தகவல் பரப்பி வருகின்றனர் என்றனர்.

ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும், அவரது மூத்த மகனும் தீவிர அரசியலில் உள்ளனர். இந் நிலையில், அவரது இளைய மகனும் தேர்தலில் போட்டியிட்டால் அதை வைத்து வாரிசு அரசியல் குற்றச்சாட்டை பலமாக எழுப்ப எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x