புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த ஜனவரி 19-ம் தேதி சந்தித்த முதல்வர் பழனிசாமி, காவிரி - குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டவும், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரை யிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரி வாயு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கவும் தமிழகம் வருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி நாளை (14-ம் தேதி) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங் கத்துக்கு செல்கிறார். அங்கு 11.15 முதல் 12.30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்திய ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். விரிவு படுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

புதிய ரயில் பாதைகள்

சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையிலான 4-வது புதிய பாதை, விழுப்புரம் - கடலூர்- மயிலாடுதுறை - தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை- திருவாரூர் தடத்தில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை திறந்து வைக்கிறார். சென்னை அடுத்த தையூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான சென்னை ஐஐடியின் புதிய வளாகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து 12.35 முதல் 12 .50 வரை முக்கிய நபர்கள் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தேர்தல் கூட்டணி, சசிகலா வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனுவை அளிப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, சாலை வழியாக மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து பகல் 1.35 மணிக்கு தனி விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

வரவேற்பு ஏற்பாடுகள்

பிரதமரை வரவேற்க பாஜக சார்பிலும், அதிமுக சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கம், பிரதமர் பயணிக்கும் சாலைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அவர்களது ஆலோசனையின்பேரில் பல் வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

விழா நடக்கும் அரங்குக்கு வெளி யில் 4 அடுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்படுகிறது. இதில் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடு படுத்தப்பட உள்ளனர். பிரதமர் வரும் வழித்தடங்களில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in