Last Updated : 12 Feb, 2021 07:33 PM

 

Published : 12 Feb 2021 07:33 PM
Last Updated : 12 Feb 2021 07:33 PM

போலீஸ் விசாரணையின்போது, துன்புறுத்தலா?- மதுரையில்  துப்புரவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மதுரை

மதுரை திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்கு சென்றபோது, மகன் கண்முன், துன்புறுத்தப்பட்டதால் மன உளைச்சலில் துப்புரவு தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (45). மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளராக வேலை பார்த்தார். சமீபத்தில் பைக்கார பகுதியில் நடந்த திருட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சந்தேகத்தின்பேரில், சுப்ரணியபுரம் போலீஸார் நேற்று அவரிடம் விசாரித்தனர். மீண்டும் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 11.30 மணி யளவில் கண்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீஸார் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கண்ணன் மனைவி திருப்பரங்குன்றம் போலீஸில் கொடுத்த புகாரில், ‘‘ திருட்டுச் சம்பவத்தில் தொடர்பில்லாத எனது கணவரை போலீஸார் விசாரணை என்ற பெயரில் தனது மகன் கண் முன்னே துன்புறுத்தியதால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்தார்,’’ எனக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘ பைக்காராவில் வீடு புகுந்த நடந்த திருட்டுச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் பலரை விசாரித்தோம். அதில் கண்ணனும் ஒருவர்.

ஏற்கெனவே விசாரித்த நிலையில், மீண்டும் இன்று காலை மீண்டும் ஆஜராக அறிவுத்திய நிலையில், அவரது மனைவியுடன் வீட்டில் இருந்து புறப்பட்ட கண்ணன், திடீரென மனைவியை மட்டும் அனுப்பிவிட்டு, பின்னால் வருவதாகக் கூறியிருக்கிறார்.

பாதிவழியில் மனைவிக்கு கணவர் தூக்கிட்டு இறந்த தகவல் தெரிந்து இருக்கிறது. சந்தேகத்தின்பேரிலே அவரை விசாரித்தோம். போலீஸார் அவரை துன்புறுத்தவில்லை,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x