Published : 12 Feb 2021 05:42 PM
Last Updated : 12 Feb 2021 05:42 PM

பட்டாசு ஆலை விபத்து; உயிரிழந்த 11 பேர் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்: தலா ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

சென்னை

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் சிகிச்சை செலவுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட துயரச் சம்பவத்தில் அகால உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் 36 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தத் துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கவும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

கோடைக்காலம் விரைவில் தொடங்க இருப்பதாலும், கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தலா 3 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x