

தொல்லியல் துறையில் 94 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் நெறிமுறைகளின்படி சிறப்பான முறையில் பாதுகாக்க, புனரமைக்க, ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயை 2 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தொல்லியல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தொல்லியல் துறையில் 94 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேற்படி, பாதுகாக்கப்பட்ட சின்னங்களில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடி நிதியைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் தேவைக்கேற்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.
எனவே, தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களைத் தொல்லியல் நெறிமுறைகளின்படி சிறப்பான முறையில் பாதுகாப்பதற்கும், அதன் வரலாற்றுச் சிறப்பினை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கும், அப்பணியின் சிறப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டும், வரவு-செலவு திட்டத்தில் தொடரும் செலவினமாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடியை 2020-2021ஆம் நிதியாண்டு முதல் ரூ.2 கோடியாக (ரூபாய் இரண்டு கோடி மட்டும்) உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது”.
இவ்வாறு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.