Last Updated : 12 Feb, 2021 03:53 PM

 

Published : 12 Feb 2021 03:53 PM
Last Updated : 12 Feb 2021 03:53 PM

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு; 36 பேர் காயம்

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது.

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் என்ற பெயரில் பட்டாசு ஆலை அச்சங்குளத்தில் இயங்கி வருகிறது.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில், இன்றும் வழக்கம்போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஓர் அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்து உள்ள 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இதில், ஏழையிரம்பண்ணையைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் உள்பட 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர்.

இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் மற்றும் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம்பட்ட நபர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், எஸ்.பி. பெருமாள் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் இரங்கல்:

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தமிழகத்தின் விருதுநகர் தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x