Published : 12 Feb 2021 04:00 PM
Last Updated : 12 Feb 2021 04:00 PM

அதிமுக ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட, உயிரிழந்த விவசாயிகளை பட்டியலிட தனி புத்தகமே போட வேண்டும்: திமுக விவசாய அணி செயலாளர் விமர்சனம்

ஏ.கே.எஸ்.விஜயன்: கோப்புப்படம்

சென்னை

அதிமுக ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட, உயிரிழந்த விவசாயிகளைப் பட்டியலிட தனி புத்தகமே போட வேண்டும் என, மாநில திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (பிப். 12) வெளியிட்ட அறிக்கை:

"அதிமுக ஆட்சியில் நடந்த விவசாயிகள் படுகொலைகளை மறைக்க தினமும் திமுக மீது பழி சுமத்தி வரும் முதல்வர் பழனிசாமிக்கு திமுகவின் விவசாய அணியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்ற போதெல்லாம் விவசாய விரோத நடவடிக்கைகள்தான். விளைந்த நெல்லை கொள்முதல் செய்யவே கமிஷன் வாங்கிய ஆட்சி.

விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக செயல்பட்டு வந்த உழவர் சந்தையை மூடி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவந்த நெல்லை காக்க வைத்து அது மழையால் முளைக்க வைத்த ஆட்சி பழனிசாமியின் அதிமுகஆட்சி.

குடிமராமத்துப் பணிகள் என்கிற பெயரால் பலஆயிரம் கோடி ரூபாய் பகல் கொள்ளை அடித்துவிட்டு, தமிழகத்தின் நீர்நிலைகள் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாராமல் வஞ்சித்து, மழையாலும் வெள்ளத்தாலும் வேளாண் பயிர்களை அழிக்க வைத்து வேடிக்கை பார்த்தது அலங்கோல அரசு இந்த பழனிசாமி அரசு.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

விவசாய நிலங்களை அழித்து கமிஷன் பெருவதற்காக எட்டுவழி சாலையை அமைக்க அனுமதி கொடுத்ததும் தானே என்பதை வசதியாக மறந்து விட்டு எடப்பாடி பழனிசாமி பேசி வருவது வேடிக்கையாக இருக்கிறது.

தான் ஒரு விவசாயி என்றும், விவசாய காவலர் என்றும் தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்டார். அடுத்த நாளே மத்திய அரசு கொண்டு வந்த விவசாய விரோத வேளாண் சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தார். உண்மையான விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடுகிறார்கள். ஆனால், விவசாயி என்று கபட வேடம் போடும் பழனிசாமி, 'மூன்று வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு' என்று கேள்வி கேட்டு, போராடும் விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, விவசாயிகளை 'புரோக்கர்கள்' என்று பிரச்சாரம் செய்து அவமதிக்கிறார். இவர் விவசாயி என்று சொல்லிக் கொள்ள என்ன தகுதி இருக்கிறது?

தன் துரோகத்தை மறைக்க கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்று அறிவித்தார். ஆனால், தனது சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிகம் கடன் தள்ளுபடி செய்து கொண்ட ஒரே முதல்வர் பழனிசாமி! அந்த உண்மை வெளியே கசிந்தவுடன் இன்றைக்கு 'விவசாயிகளை சுட்டுக் கொன்ற ஆட்சி திமுக' என்று ஒவ்வொரு கூட்டமாக பேசி வருகிறார்.

'விவசாய சாகுபடிக்கு மின் கட்டணத்தை ஒரு பைசா குறைத்து சலுகை தரவேண்டும்' என்று அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள் போராடினார்கள். விவசாயிகளின் உணர்வுகளை மதித்து திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததும் 'விவசாய சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஒரு பைசாகூட கட்டவேண்டாம்' எனக் கூறி 'விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்' என்று அறிவித்து, செயல்படுத்திக் காட்டியவர் கருணாநிதி!

அதுமட்டுமா? காவிரி பிரச்சினையை பேச மத்திய அரசு கூட்டிய கூட்டத்தை ஆட்சிப்பொறுப்பில் இருந்த ஜெயலலிதா புறக்கணித்த நிலையிலும், விவசாய பிரச்சினைகளை தீர்க்க எந்த விவசாய அமைப்பையும் அரசியல் கட்சிகளையும் கூப்பிடாமல் அதிகார தோரணையோடு தானே முடிவுகளை எடுத்த நிலையிலும், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து கட்சி கூட்டங்களை நடத்தி பல்வேறு விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடியவர் திமுக தலைவர்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றவர் திமுக தலைவர்! முழு விவசாயக் கடன் தள்ளுபடிக்கு முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி. 7,600 கோடிகளில் விவசாயக் கடனை சிறு, குறு என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்தது கருணாநிதி தான். இன்றைக்கு இந்த கடன் தள்ளுபடிக்குக் கூட திமுக தலைவர் கொடுத்த வாக்குறுதியே காரணம்!

விவசாயிகள் படுகொலை அதிமுக ஆட்சியில் நடந்திருக்கிறது என்ற வரலாறு கூட பழனிசாமிக்குத் தெரியவில்லை. இந்த அறிக்கையை படித்துப் பார்த்தாவது அவர் தெரிந்து கொள்ள வேண்டும். திருச்சி சிறையில் நாச்சிமுத்துக்கவுண்டர் 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் வி.சுப்ரமணியன் 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் பி.சின்னசாமி கவுண்டர் 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல்மாவட்டம் கே.குப்புசாமி 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் பி.கிருஷ்ணமூர்த்தி 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் பி.மாணிக்ககவுண்டர் 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கியசாமி 10.04.1978 நொச்சியோடைப்பட்டி, திண்டுக்கல் தாலுகா முருகேசக்கவுண்டர் 11.04.1978 ஒடுகத்தூர், வேலூர் தாலுகா, (வா.ஆ) ஆர்.அரசுத்தேவர் 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா பி.சர்க்கரை தேவர் 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா வி.புலியுடை தேவர் 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா முத்து வேலம்மாள் 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா வி. பாக்யத்தாள் 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா மகாலிங்கம் 23.04.1979 உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா வேலுச்சாமி ,31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா வரதராஜ் நாயக்கர் 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா என்.வெங்கடசாமி 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா ரவீந்திரன் 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா முரளி 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா மணி 31.12.1980 டி.சி.கண்டிகை, திருத்தணி தாலுகா ஏழுமலை 31.12.1980 வீரப்பார், பண்ருட்டி தாலுகா, கடலூர் கி. துளசிமணி, சித்தோடு கங்கார்புரம், பவானி வட்டம் எத்திராஜ நாயக்கர் - 29.03.1993 வெங்கடாசலபுரம் தாலுகா, சங்கரன்கோவில் வட்டம் ஜோசப் இருதய ரெட்டியார் - 29.03.1993 அகிலாண்டபுரம், ஒட்டபிடாரம் வட்டம் என அனைவரும் அதிமுக ஆட்சியில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி உயிரிழந்த விவசாயிகள்.

இந்தப் பெயர்கள் பழனிசாமிக்கு ஞாபகத்திற்கு வரவில்லை என்றாலும், பிராந்தியங்கரை இடும்பையன், ஓவர்ச்சேரி துரைராஜ், பெருமழை காத்தமுத்து, குடவாசல் தங்கராஜ், திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ். ஆதிச்சபுரம் அழகேசன், அதிராம்பட்டினம் நாராயணசாமி, முசிரியம் சேகர், திருக்களார் நடராஜன், பாலையக்கோட்டை அசோகன், சீதக்கமங்கலம் அழகர்சாமி, ஓகை அருள்மேரி, பேரளம் ஜெயக்குமார், கீரைக்கொட்டகம் கலியபெருமாள், கோவிலூர் மகாலிங்கம், குடவாசல் மீராபாய், பத்தூர் நவசீலன், நடராஜன், பரவாக்கரை ராதாகிருஷ்ணன், குன்னூர் ராமலிங்கம், குன்னலூர் சுந்தரர்ஜன், வரம்பியம் சீனிவாசன் ஆகிய இந்த பெயர்களையாவது பழனிசாமி நினைவில் வைத்துள்ளாரா?

இவர்கள் எல்லாம் அதிமுக ஆட்சிக்காலத்தில் வேதனைகளை தாங்கிட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட டெல்டா மாவட்ட விவசாயிகளில் சிலரின் பெயர்கள் மட்டுமே. அனைத்து மாவட்டங்களிலும் பழனிசாமியின் ஆட்சியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை பட்டியலிட இந்த அறிக்கை போதாது, தனியாக ஒரு புத்தகம் போட வேண்டும் பழனிசாமி!

'காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும்' என்பார்கள். அது போல், பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் அதிமுக ஆட்சியில் நடந்த விவசாய தற்கொலைகளை மறைத்து மனசாட்சி இன்றி திமுக மீது பழி போடுகிறார்! ஆனால், விவசாயிகளுக்குத் தெரியும் நம் உண்மையான காப்பாளன் திமுக தலைவர் என்பது என்று பழனிசாமிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

'எலிக்கறியை தின்பது விவசாயிகள் குல வழக்கம்' என்று விவசாயிகளை பழித்ததையும், பட்டினியின் கோரப்பிடியில் வயிற்றை பிடித்து துடிதுடித்து மாண்ட சிறுவன் பிரகாஷை உடல்நலக்குறைவால் இறந்தான் என்று மாற்றியதையும், விவசாய தற்கொலைகள் செய்துகொண்ட குடும்பங்களை வந்து பார்த்து ஆறுதல் சொல்லகூட அருகதை அற்ற முதல்வர் யார் என்பதையும், வறட்சி கணக்கெடுப்புக்கு வந்த அதிமுக அமைச்சர் தன் வேளை உணவுக்கு 18 ஆயிரம் ரூபாய் கணக்கு காட்டியதையும் விவசாயிகள் இன்றைக்கு மட்டுமல்ல, பலநூறு ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள் என்பதை பழனிசாமி நினைவில் கொள்ள வேண்டும்

திமுக ஆட்சியில் விவசாயத்தில் விருது வாங்கியவர்களின் பட்டியல் உண்டு, விவசாய புரட்சியை கண்டு அறிந்து கொள்ள மத்தியக்குழு தமிழகம் வந்த சாதனை உண்டு. உங்கள் அதிமுக.ஆட்சியில் மட்டும்தான் விவசாயிகளின் தற்கொலை பட்டியலும், வறட்சியையும் அழிவையும் பார்க்க மத்தியக்குழு வந்த சாதனைகள் உண்டு!

ஆனால், அதிமுக ஆட்சி, நாடே இன்றைக்குப் போராடும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு பதவியை காப்பாற்றிக் கொள்ள ஆதரித்த முதல்வர் பழனிசாமியைக் கொண்ட ஆட்சி!

'மல்லாந்து படுத்துக் கொண்டு காரி உமிழ்ந்தால் அது தன் முகத்தில்தான் விழும்' என்பதை அறிந்து முதல்வர் பதவியின் கண்ணியத்தை காவு கொடுக்கும் விதத்தில் பேசாமல், பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரிக்க விரும்புகிறேன்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x