Published : 12 Feb 2021 02:42 PM
Last Updated : 12 Feb 2021 02:42 PM

கட்டிட விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கை: 6 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியில், கட்டிட விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மனுதாரரை புகார் அனுப்பவும்,

அதன்மீது 6 வாரத்தில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், கட்டிட விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னையைச் சேர்ந்த பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது “பொது மக்கள் புகார் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனால் பதில் வழங்குவதில்லை. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என மனுதாரர் வாதிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பாமல், நேரடியாக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேரடியாக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியது முறையற்றது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

பின்னர், கோரிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு புதிதாக மனு அனுப்ப மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த மனுவை ஆறு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x