Last Updated : 12 Feb, 2021 03:16 AM

 

Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

தேர்தல் வாக்குறுதியில் தலையிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

அரசியல் கட்சிகள் தேர்தலை முன்னிட்டு, நாங்கள் வெற்றி பெற்று வந்தால் இந்த திட்டங்களை செயல்படுத்துவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கைகளாக அளிக்கின்றன. அவற்றில் நிறைவேற்ற முடியும் அறிவிப்புகளும், முடியாத அறிவிப்புகளும் இருக்க வாய்ப்புண்டு.

அறிவிப்புகளை வெளியிடும்போது அவற்றுக்கான நிதி வளங்களையும் குறிப்பிடும்போது மக்கள் வாக்குகளை கவரும் வகையில் அவை அமைகின்றன. பல நேரங்களில் அரசியல் கட்சிகள் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை வெளியிடும்போது, அவற்றுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்கொள்ளவும் நேரிடுவதுண்டு.

இந்நிலையில், தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினரிடம், தேமுதிக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்படும் வாக்குறுதிகள், நிறைவேற்றப்படும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகள் அளித்தால் அவற்றை ஆணையம் தடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒளிவு மறைவற்ற தன்மை

இதற்கு நேற்று பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஆணையம் தலையிட முடியாது. அது அந்தந்த அரசியல்கட்சிகளை பொறுத்தது ஆகும்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், தேர்தல் அறிக்கை தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு சில அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒளிவு மறைவற்ற தன்மை, சமநிலையை பேணுதல், நம்பகத்தன்மை ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். அதற்கான நிதித் தேவைகளுக்கான வழிவகைகள் தெளிவாக சுட்டிக்காட்டப்பட வேண்டும். நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் உள்ள வாக்குறுதிகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகள் வெளியிடும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்பதே நிதர்சனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x