Last Updated : 11 Feb, 2021 09:18 PM

 

Published : 11 Feb 2021 09:18 PM
Last Updated : 11 Feb 2021 09:18 PM

இலங்கை அகதிகளுக்கு எதிரான போலி பாஸ்போர்ட் வழக்குகளை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை

இலங்கை அகதிகளுக்கான எதிரான போலி பாஸ்போர்ட் வழக்கின் விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முருக கணேசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் பாஸ்போர்ட் பெற இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். 7 கட்ட பரிசோதனைக்கு பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதில் காவல்துறை பரிசோதனை முக்கியமானது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவரின் முகவரி சரியா? அவர் மீது வழக்குகள் உள்ளதா? என்பதை போலீஸார் சரிபார்த்து அறிக்கை அளிப்பர். அதன் பிறகே பாஸ்போர்ட் பெற முடியும்.

மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முதல் தகவல் அறிக்கையுடன் நிற்கிறது. மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இலங்கை அகதிகள் பலர் போலியான இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். எனவே, போலி பாஸ்போர்ட் வழக்குகளை சிபிஐ அல்லது அதற்கு இணையான வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், போலி ஆவணங்கள், முகவரி அளித்து இலங்கை அகதிகள் பாஸ்போர்ட் வாங்கிய வழக்கில் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே காவல் சரகத்தில் 5 மாதங்களில் போலி முகவரியில் 52 பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. போலி முகவரி அடிப்படையில் பாஸ்போர்ட் பெற போலீஸார், தபால் துறையினர் துணை போயுள்ளனர்.

எனவே விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், போலி பாஸ்போர்ட் வழக்கில் போலீஸார், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி, தபால் துறை ஊழியர் என 22 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 175 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது என்றார்.

இதையடுத்து, இலங்கை அகதிகள் பலர் போலி முகவரிகள், ஆவணங்கள் அளித்து இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். மனுவில் பொதுநலன் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x