Last Updated : 11 Feb, 2021 05:23 PM

 

Published : 11 Feb 2021 05:23 PM
Last Updated : 11 Feb 2021 05:23 PM

கறுப்பு வைரம் எனக் கூறி ரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட முயன்ற கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர் கைது: தூத்துக்குடி போலீஸார் தீவிர விசாரணை

தூத்துக்குடியில் கறுப்பு வைரம் எனக் கூறி ரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட முயன்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருளை ஆய்வுக்கு அனுப்ப எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் இருவர் தங்கியிருந்து போலி வைரத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீஸார் இன்று தீவிர சோதனை நடத்தி 2 நபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலம் பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர் தின்னே பகுதியை சேர்ந்த சீதாராமன் மகன் அனந்தா (37) மற்றும் ஓசூர் பெஸ்தி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த தனுராம் மகன் வெங்கடேஷ் பாபு (45) என விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக தங்களிடம் கறுப்பு வைரம் இருப்பதாகவும், அதனை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ரூ.27 லட்சம் பணம் கேட்டு தூத்துக்குடியில் உள்ள சில நகை வியாபாரிகள் மற்றும் தனி நபர்களை அணுகியுள்ளனர்.

இதுவரை யாரும் சிக்காததால் தொடர்ந்து அதனை விற்பனை செய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், அதனை விற்பனை செய்வதற்குள் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.

அவர்கள் வைத்திருந்த 425 கேரட் கறுப்பு வைரம் எனப்படும் பொருளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தென்பாகம் காவல் நிலையத்துக்கு வந்து அந்த பொருளை பார்வையிட்டு நேரில் விசாரணை நடத்தினார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த பொருள் உண்மையிலேயே கறுப்பு வைரம் தானா என்பது குறித்து ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை அனுப்பி வைக்கவும், கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தவும் எஸ்.பி உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கின்றனர். மேலும் அவர்களிடம் வைரம் தொடர்பாக எந்த முறையான ஆவணங்களும் இல்லை. எனவே, அவர்கள் மோசடியில் ஈடுபட முயன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x