சசிகலாவிடம் நேரடியாக போலீஸ் நோட்டீஸ் அளித்த டிஎஸ்பி: துறை ரீதியான நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சசிகலாவிடம் நேரடியாக போலீஸ் நோட்டீஸ் அளித்த டிஎஸ்பி: துறை ரீதியான நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

பிப்ரவரி 8-ம் தேதி சென்னை திரும்பிய சசிகலாவிடம் நேரடியாக போலீஸ் நோட்டீஸ் அளித்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த ஜன.27 அன்று விடுதலையான சசிகலா கரோனா தொற்று காரணமாக ஓய்வெடுத்த நிலையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி தமிழகம் வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக பெங்களூரு மருத்துவமனையிலிருந்து ஓய்வெடுக்க விடுதிக்கு திரும்பிய சசிகலா அதிமுக கொடியை தனது காரில் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர்கள், அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் சசிகலாவை வரவேற்க அவர் வரும் வழி எங்கும் அமமுகவினர் போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதேப்போன்று அவரை வரவேற்பதற்காக அமமுக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகன் காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.

இதை பரிசீலித்த காவல் துறையினர், அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதியளித்தனர். இதுதொடர்பான நோட்டீஸை, அனுமதி கோரிய அறிவழகனிடம் கொடுக்காமல், தமிழக எல்லைக்குள் வந்த சசிகாலாவிடம் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சரவணன் கொடுத்தார்.

அறிவழகன் அளித்த விண்ணப்பத்தின் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவரிடம் கொடுக்காமல், சசிகலாவிடம் கொடுத்ததால் அவரை வரவேற்க திரண்டிருந்த தொண்டர்கள் இடையே பதற்ற நிலையை உருவாகியதால், காவல்துறை நிலை விதிகளை மீதிய டி.எஸ்.பி. சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in