Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட இடைத்தரகர் சென்னை விமான நிலையத்தில் கைது: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தபோது, விமானநிலையத்தில் வைத்து குடியுரிமை பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் பலர் சேர்ந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்த மாணவரும் அவரது தந்தையும் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடங்கிய விசாரணை நீண்டு கொண்டே போன நிலையில், இதுவரை 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஒருஇடைத்தரகர் என 16 பேர்சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணை விறுவிறுப்படைந்து வந்த நிலையில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக 10 பேரின் புகைப்படங்களை பெங்களூரில் உள்ள ஆதார் ஆணையத்துக்கு சிபிசிஐடி போலீஸார் அனுப்பி,அவர்கள் குறித்த விவரங்களை கேட்டிருந்தனர். இதில்எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. இதனால் இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

இதனிடையே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு முக்கிய இடைத்தரகர்களாக செயல்பட்டதாக கேரளாவைச் சேர்ந்த ரசீத் மற்றும் மோகன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர். இதில்ரசீத் கடந்த மாதம் தேனி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

மற்றொருவரான மோகன் சிங்கப்பூர் தப்பிச்சென்று தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அவரைப் பிடிக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி சார்பில்‘லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்தது. மோகனின் விசா காலம் முடிந்ததால் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை அவர் சென்னை வந்தார்.

அப்போது குடியுரிமை அதிகாரிகள், அவரை பிடித்துவிமான நிலையத்தில் ஒருஅறையில் காவலில் வைத்தனர். பின்னர், சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x