Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பெரியார் யுனெஸ்கோ விருது பெற்றதாக தவறான தகவல்: பரிசீலிக்குமாறு பாடப் புத்தக குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் கல்லூரி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பெரியார் ‘யுனெஸ்கோ’ விருது பெற்றதாக உள்ள தகவலை நீக்கக் கோரும் மனுவை 12 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க பள்ளி, கல்லூரி பாடப் புத்தகக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் திராவிடர் கழகம் மற்றும் அதைச் சார்ந்த அமைப்பினர் தொடர்ந்து நாட்டில் பிரிவினைவாதம், ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அரசியல் ஆதாயத்துக்காக வரலாறு என்ற பெயரில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்

அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் கல்லூரி பாடப் புத்தகத்தில் பெரியாருக்கு தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதை பெரியாருக்கு 1970-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் தவறானது.

தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இந்தத் தகவலை வேண்டுமென்றே பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர். யுனெஸ்கோவின் முத்திரையை போலியாக பயன்படுத்தி உள்ளனர். எனவே, 9-ம் வகுப்பு பாடப் புத்தகம் மற்றும் உயர் கல்வி பாடப் புத்தகத்தில் உள்ள பெரியார் ‘யுனெஸ்கோ’ விருது பெற்றது குறித்த தவறான தகவல்களை நீக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாடப் புத்தகக் குழு பரிசீலனை செய்து 12 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x