Published : 10 Feb 2021 07:38 PM
Last Updated : 10 Feb 2021 07:38 PM

தேர்தல் தேதி அறிவிக்கும்வரை தொடர் போராட்டம்: மதுரையில் மக்கள் நலப்பணியாளர்கள் முடிவு

மதுரை

மதுரையில் கடந்த 7 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நலப் பணியாளர்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் வரையில் இது தொடரும் என அறிவித்துள்ளனர்.

மீண்டும் பணி நியமனம் வழங்கக்கோரி மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த பிப்.4-ம் தேதிமுதல் மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில அளவில் மதுரையில் மட்டுமே இப்போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளிலேயே போலீஸார் கைது செய்வர் என எதிர்பார்த்தனர்.

அப்படி எதுவும் நடக்காததுடன் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். கைது செய்யாததால் உணவு ஏற்பாடும் போலீஸாரால் செய்து தரப்படவில்லை. பணியாளர்களே செய்தபோதும் அனுமதி வழங்க மறுத்தனர்.

பின்னர் வேறு வழியின்றி அனுமதித்ததால் சங்க நிர்வாகிகளே போராட்ட இடத்திலேயே உணவு சமைத்தும், அங்கேயே தூங்கியும் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இரவில் உள்ளூர் மற்றும் அருகிலுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதும், காலையில் மீண்டும் போராட்டத்தில் இணைவதுமாக உள்ளனர். தினசரி 100 பேர் வரையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்ட இடத்தை சுற்றி தடுப்புகளை ஏற்படுத்திவிட்டு போலீஸார் ஒதுங்கிக்கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், ‘ இந்த அரசு எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும்.

இதில் எது முதலில் நடக்கிறதோ அதுவரையில் போராட்டம் தொடரும். இதுவரை அரசு தரப்பில் அலுவலக உதவியாளர் கூட எங்களை கண்டுகொள்ளவில்லை.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் 3 முறை பணி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. வரும் தேர்தலிலும் உறுதி அளிக்கும் என நம்புகிறோம்.

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டோம் என்ற ஒரு காரணத்திற்காகவே நாங்கள் ஒதுக்கப்படுகிறோம். எங்கள் பரிதாப நிலைமையை அனைத்து கட்சியினர், அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தை தொடர்கிறோம். விரைவில் பணி நியமனம் கிடைக்கும் என நம்புகிறோம்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x