Published : 10 Feb 2021 03:00 PM
Last Updated : 10 Feb 2021 03:00 PM

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் காத்திருப்புப் போராட்டம்

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரைக் கண்டித்து ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு மீனவர்கள் காத்திருப்புப் போராட்டத்தை இன்று (புதன்கிழமை) நடத்தினர்.

ராமேசுவரம் தீவுகளில் 21 மீன்பிடிக் கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்கள் கடற்கரையை ஓட்டியப் பகுதிகளில் சிறுதொழில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடிகளைப் பயன்படுத்தி விசைப்படகுகள் கரையோரம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ராமேசுவரத்தில் உள்ள மீனவ கிராமங்களில் சிறு தொழில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றது.

எனவே, அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடிகளைப் பயன்படுத்தும் படகுகள் பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல முறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடிகளைப் பயன்படுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் மீன்வளத்துறையை கண்டித்து ராமேசுவரம் தீவு பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவகத்திற்கு பேரணியாக வந்து காத்திருப்புப் போராட்டத்தில் மீனவர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு தனுஷ்கோடி பாரம்பரிய மீனவர்கள் நல கூட்டமைப்பின் செயலாளர் அமுதன்‌ தலைமை வகித்தார். ஏஐடியூசி மீனவர் சங்கம் மாநில தலைவர் முருகானந்தம், மாநிலச் செயலாளர் செந்தில் வேல், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் கண். இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து ஏஐடியூசி மீனவர் சங்கம் மாநிலத் தலைவர் முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தின் வங்காள விரிகுடா, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தால் கடல் வளம் அழிவதுடன் மீன்களின் இனப்பெருக்கம் அழிக்கப்படும் என்பதால் இந்த வலைகளைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் இந்தத் தடை செய்யப்பட்ட வலைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.

இதனைத் தடுக்க வேண்டிய மீன்வளத்துறையோ தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இதனை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x