Last Updated : 10 Feb, 2021 02:18 PM

2  

Published : 10 Feb 2021 02:18 PM
Last Updated : 10 Feb 2021 02:18 PM

9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெரியார் யுனெஸ்கோ விருது பெற்ற தகவலை நீக்கக்கோரி வழக்கு: மாநில பாடப்புத்தக குழு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் கல்லூரி பாடப்புத்தகத்தில் பெரியார் யுனெஸ்கோ விருது பெற்றதாக உள்ள தகவலை நீக்கக்கோரும் மனு மீது மாநில பள்ளி, கல்லூரி பாடப்புத்தக குழு 12 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுரஸ்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் திராவிடர் கழகம் மற்றும் அதனை சார்ந்த அமைப்பினர் தொடர்ந்து இந்து துவேச கருத்துக்களை பரப்பியும், இந்து கடவுள்களை அநாகரீகமாக பேசியும் வருகின்றனர்.

இவர்கள் நாட்டில் பிரிவினைவாதம், ஜாதி, மத மோதல்களை் ஏற்படும் வகையிலும், தேச நலனுக்கு ஊறு ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டிற்கும், நாட்டில் நிலவும் ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அரசியல் ஆதாயத்துக்காக தவறான தகவல்கள் வரலாறு என்ற பெயரில் பரப்பப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் கல்லூரி பாடப் புத்தகத்தில் பெரியாருக்கு தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விருதை பெரியாருக்கு 1970-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் தவறானது. தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இருப்பினும் இந்த தகவலை வேண்டுமென்றே பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளனர். யுனெஸ்கோவின் முத்திரையை போலியாக பயன்படுத்தியுள்ளனர்.

பாடப்புத்தகத்தில் தவறான தகவல்களை மாணவர்கள் கற்கும் போது தவறான புரிதல் ஏற்படுவதுடன், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியதாகவும் ஆகிவிடும். தமிழக அரசு தலையிட்டு பாடப்புத்தகத்தில் உள்ள வரலாற்று பிழையை நீக்கி மாணவர்களின் எதிர்காலத்தையும், சிறந்த கல்வியையும் உறுதிப்படுத்த வேண்டும். எனவே, ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகம் மற்றும் உயர் கல்வி பாடப்புத்தகத்தில் உள்ள பெரியார் குறித்த தவறான தகவல்களை நீக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தக குழு பரிசீலனை செய்து 12 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x