Last Updated : 10 Feb, 2021 03:14 AM

 

Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

பயிர்க் கடன் தள்ளுபடியைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள், சங்கங்களால் வழங்கப்பட்ட பொது நகைக் கடனும் தள்ளுபடியாக வாய்ப்பு

பயிர்க் கடன் தள்ளுபடியைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள்மற்றும் சங்கங்களில் பெறப்பட்டநகைக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கூட்டுறவு வங்கிகளில், பயிர்க்கடன் பெற்ற, 16.43 லட்சம் விவசாயிகளின், கடன் நிலுவை தொகையான ரூ.12 ஆயிரத்து, 110 கோடியே 74 லட்சம் தள்ளுபடி செய்யப்படும்” என முதல்வர் பழனிசாமி கடந்த 5-ம் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ்அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை 8-ம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நிதிமற்றும் வங்கியியல்) அந்தோணிசாமி ஜான் பீட்டர் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘கூட்டுறவு பொது நகைக் கடன்கள் 01.04.2020 முதல் 31.12.2022 வரை மற்றும் 01.04.2020 முதல் 31.01.2021 வரை பொது நகைக் கடன்கள், 31.12.2020 மற்றும் 31.01.2021 தேதி வரையிலான நகைக் கடன் நிலுவை விவரங்களை பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், பயிர்க் கடன்களைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற நகைக் கடன்களும் தள்ளுபடி என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூட்டுறவுத் துறையினர் தெரிவிக்கின்றனர். இதே போல கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதா என தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வட்டாரங்களில் கேட்டபோது, “கூட்டுறவுத்துறை மாநில அரசின்கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான நிதி ஆதாரங்களை மாநில அரசு வழங்கி வருகிறது.

தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன்களுக்கான நிதியை மாநில அரசு கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களுக்கு தவணை தவணையாகவே வழங்கும். அதுபோல கல்விக் கடனை மாநில அரசு தள்ளுபடி செய்ய முடியாது. ‘கல்விக் கடனை அரசேஏற்றுக் கொள்ளும்’ என்று அறிவிக்கலாம். அப்படி அரசே கல்விக் கடனை ஏற்றுக் கொண்டால், உடனேஅதற்கான முழு தொகையையும் வங்கிகளுக்கு அரசு செலுத்த வேண்டும். இதற்கான நிதி அரசிடம் உள்ளதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x