Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

ஒருங்கிணைப்பாளர்கள் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது: சசிகலாவுக்கு கார் கொடுத்தவர் தகவல்

அதிமுக-வில் இருந்து என்னை நீக்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரமில்லை என சசிகலாவுக்கு கார் கொடுத்த அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா,நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். ஓசூர் ஜூஜூவாடியில் அவரது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றுமாறு போலீஸார் கூறினர்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர்.சம்பங்கிக்கு சொந்தமான அதிமுககொடி கட்டப்பட்ட காரில், ஜூஜூவாடியிலிருந்து சசிகலா பயணத்தை தொடர்ந்தார்.

இதையடுத்து, அதிமுகவின் கொள்கை, கட்டுப்பாட்டை மீறியதாக நேற்று முன்தினம் எஸ்.ஆர்.சம்பங்கி உட்பட 7 பேர் அதிமுக-விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவித்தனர்.

இதுதொடர்பாக எஸ்.ஆர்.சம்பங்கி கூறும்போது, ‘‘பெங்களூரு செல்லும்போது அதிமுக பொதுச்செயலாளராக சென்ற சசிகலா, மீண்டும் சென்னைக்கு திரும்பும்போது, அதிமுக கொடியுடன் வரவேற்பு அளித்தோம். சசிகலா கார் பழுதானதால், எனது காரை அவர் தொடர்ந்து பயணம் செய்யக் கொடுத்தேன்.

இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் அமமுக கொடியை பயன்படுத்தவில்லை. அந்த கட்சியிலும் சேரவில்லை.

இவ்வாறான நிலையில் எங்களை அதிமுக கட்சியில் இருந்து எப்படி நீக்கம் செய்தார்கள். எங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை. எங்களை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது.

இதுதொடர்பான வழக்கு நிலுவையிலும் உள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஒருவர் பேசினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொண்டர்கள் மீது மட்டும் நடவடிக்கையா?

இவ்வாறு சம்பங்கி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x