Published : 09 Feb 2021 07:34 PM
Last Updated : 09 Feb 2021 07:34 PM

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியானது: 3,752 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி

சென்னை

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வுக்கான முடிவு வெளியாகியுள்ளது. முதல் நிலைத் தேர்வில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு/ நேர்காணல் தேர்வுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்தும் (டிஎன்பிஎஸ்சி) 2018-2019 மற்றும் 2019-2020க்கான குரூப்-1 தேர்வு, துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய அரசுப் பதவிகளுக்கு தேர்வுகள் கடந்த ஜன.3 அன்று நடந்தது.

இத்தேர்வில் தமிழக அரசின் துணை ஆட்சியர் பணிக்கு (டிஆர்ஓ) காலியாக உள்ள 18 இடங்களுக்கும், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பணிக்கான 19 இடங்களுக்கும், வணிக வரித்துறை உதவி ஆணையர் பணிக்கான 10 இடங்களுக்கும், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் பணிக்கான 11 இடங்களுக்கும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பணிக்கான 7 இடங்களுக்கும், மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி பணிக்கான 1 இடத்துக்கும் என மொத்தம் 66 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இத்தேர்வு ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான முடிவு இன்று வெளியானது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய செய்திக்குறிப்பு வருமாறு:

''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் இட ஒதுக்கீட்டு விதி மற்றும் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்விற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜன.3 அன்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் தேர்வெழுதினர். இதில் நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 3,752 பேர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு, மே. 28,29,30 தேதிகளில் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்காகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) அரசு கேபிள் டிவி நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் என வரும் 16-ம் (16/2/2021) தேதி முதல் மார்ச் 15 (மாலை 5.45 வரை) பதிவேற்றலாம்”.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x