Published : 09 Feb 2021 03:47 PM
Last Updated : 09 Feb 2021 03:47 PM

சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் அப்பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது, தாம்பரம் நகராட்சியின் கழிவுநீர் கொட்டப்படுவது குறித்த வழக்கில் ஆக்கிரமிப்பு மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி அமர்வு தாசில்தாருக்கு உத்தரவிட்டது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் அப்பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது, தாம்பரம் நகராட்சியின் கழிவுநீர் கொட்டப்படுவது, ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பது ஆகியவை குறித்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தாம்பரம் தாசில்தாரருக்கு 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொதுப்பணித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அப்பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்டு வழக்கை ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தாம்பரம் தாசில்தாரருக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x