Published : 09 Feb 2021 03:32 PM
Last Updated : 09 Feb 2021 03:32 PM

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை: மேலும் 3 மாதம் அவகாசம் கேட்பு

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு, தனிநபர் ஆணையம் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சை எழுந்தது. தமிழரல்லாத ஒருவரை நியமிப்பதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையை உண்டாக்கியது. இதைத் தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இதற்கிடையே சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது. புகார்கள் குறித்து விசாரணைக் குழு விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கலையரசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நவ.11 முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சூரப்பா மீது புகார் தந்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுவரை சூரப்பா மீதான புகார்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் கால நீட்டிப்புக் கேட்டு, நீதிபதி கலையரசன் தலைமையிலான தனிநபர் ஆணையம், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x