பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீது 10 நாளில் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீது 10 நாளில் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி பேச்சு
Updated on
1 min read

விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து கடந்த வாரம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் அதற்கான ரசீது 10-15 நாட்களில் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

சட்டப்பேரவையில் கடந்த 5-ம் தேதி பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை அளித்த முதல்வர் பழனிசாமி, “கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியே 74 லட்சம் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்தார்.

இதைச் செயல்படுத்துவதற்கான அரசாணையில், முதல்வரின் அறிவிப்பைச் செயல்படுத்த கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கருத்துரு அடிப்படையில் 31-1-2021 அன்று கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் ரூ.12,110 கோடியே 74 லட்சம் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது.

இத்திட்டத்தினைச் செயல்படுத்தத் தேவையான நிதி, அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டச் செயலாக்கம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும். நிதித் துறையின் அனுமதியுடன் இந்த அரசாணை வெளியிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி “பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து ஏற்கெனவே தமிழக அரசு அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 10-15 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in