Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த 5 முதியோருக்கு ஒரே வாரத்தில் ஓய்வூதிய ஆணை: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த 5 முதியோருக்கு ஒரே வாரத்தில் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10 மாதங்களாக நடத்தப்படாமல் இருந்த மக்கள் குறைதீர் கூட்டம், கடந்த 1-ம் தேதி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் 211 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.

ஆட்சியர் அறிவுறுத்தல்

அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க தொடர்புடைய துறைகளின் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதன்படி, கடந்த 1-ம் தேதி முதியோர் உதவித் தொகைக்காக விண்ணப்பித்தவர்களில், தகுதியுள்ள 5 பேருக்கு ஒரே வாரத்தில் முதியோர் ஓய்வூதியம் அளிப்பதற்கான ஆணைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன் விளைவாக நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 5 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.

284 மனுக்கள்

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 4 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் மானியமாக ரூ.30 ஆயிரத்துக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார். நேற்றைய கூட்டத்தில், பொதுமக்கள் 284 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தி னார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலகுரு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x