Published : 08 Feb 2021 09:11 PM
Last Updated : 08 Feb 2021 09:11 PM

சசிகலாவுக்கு கார் கொடுத்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சம்பங்கி நீக்கம்

சசிகலா (இடது), நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி சம்பங்கி (வலது)

சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் கூடிய காரை கொடுத்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் சம்பங்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதேபோல், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக திருவள்ளூர் கிழக்க மாவட்டக் கழக துணைச் செயலாளர் டி.தட்சணாமூர்த்தியும் நீக்கப்பட்டார்.
இவர்களைத் தவிர கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் சந்திரசேகர ரெட்டி என்ற போகி ரெட்டி, ஒன்றிய கழக மாவட்டப் பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி, கொம்மேப்பள்ளி ஊராட்ச்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த் குமார், ஒன்றிய இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறைத் தலைவர் நாகராஜ், சிங்கிரிப்பள்ளி, சூளகிரி மேற்கு ஒன்றியம் ஆனந்த் ஆகியோர் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நீக்கத்தின் பின்னணி:

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்று (பிப்.8) காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கிப் புறப்பட்டார். பெங்களுர் நகரில் இருந்து காலை 7.50-க்கு அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்ட சசிகலா, காலை 10.15 மணிக்குத் தமிழக எல்லை வந்து சேர்ந்தார்.

சசிகலா தமிழக எல்லைக்கு வந்ததும் காரில் இருந்த சசிகலாவிடம், கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி சக்திவேல் நோட்டீஸ் வழங்கினார்.
நோட்டீஸில் காரில் உள்ள அதிமுக கொடி அகற்றப்பட வேண்டும். சசிகலா காருக்குப் பின்னால் 5 கார்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. காரில் உள்ள கொடியை அகற்றச் சிறிது நேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

அப்பேது சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன், போலீஸ் அதிகாரிகளுடன் பேசும்போது, "சசிகலா இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார். அவருக்கு அதிமுக கொடியைப் பயன்படுத்த உரிமை உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் காரில் கொடி கட்டக்கூடாது என்று சொல்ல முடியாது. இதை அகற்ற வேண்டும் என்று காவல்துறை சொல்வது சரியில்லை" என்று வாதிட்டார்.

கொடியை அகற்றாமல் தமிழ்நாட்டுக்குள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டது. இதனால் சசிகலா உடனடியாக சூளகிரி அதிமுக ஒன்றியச் செயலாளரும் தொழில் அதிபருமான சம்பங்கியின் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் (TN 35 - 3333) அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x