Published : 08 Feb 2021 09:16 PM
Last Updated : 08 Feb 2021 09:16 PM

ஜல்லிக்கட்டை போல் நாய் கண்காட்சிக்கும் பிரபலமாகும் மதுரை: ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான விலை உயர்ந்த நாய்கள் பங்கேற்கும் ஆச்சர்யம்

வீடுகளில் காவலுக்கு நாய் வளர்க்கும் காலம்போய் சமீப காலமாக செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்க்கும் கலாச்சாரம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால் நாட்டு நாய்கள், வெளிநாட்டு நாய்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

அதனால், ஜல்லிக்கட்டுபோல் தற்போது மதுரையை மையமாகக் கொண்டு நாய்கள் கண்காட்சியும் பிரபலமடைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் வேட்டைக்கும், வீட்டுக்காவலுக்கும் நாய்களை பழக்கப்படுத்திய மக்கள், வணிகமயமாக்கப்பட்ட காலப்போக்கில் வெளிநாட்டு நாய்கள் வரத்தொடங்கியதும், நாய்களை வீடுகளில் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கத்தொடங்கினர்.

அதனால், நாட்டு நாய்களுக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. வெளிநாட்டு நாய்களை லட்சங்கள் கொடுத்து வாங்குவோர் நாட்டு நாய்கள் வளர்ப்பிற்கு ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், நாட்டின நாய் ஆர்வலர்கள், சமூக விழிப்புணர்வால் தற்போது வெளிநாட்டு நாய்களுக்கு இணையாக நாட்டின நாய்கள் வளர்ப்பும் அதிகரித்துள்ளது. நாய் வளர்ப்பிக்கும், அதன் விற்பனைக்கும் மற்றும் கண்காட்சிக்கும் மதுரை மையமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் மதுரை காந்திமியூசியத்தில் நடக்கும் நாய்கள் கண்காட்சிக்கு இந்தியா முழுவதும் இருந்து நாய்கள் வருகின்றனர்.

சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை மந்தை, கட்டை போன்ற நாட்டின நாய்கள் முதல் கிரேட்டன், டோபர் மேன், செயின்ட் பெர்னாட், ஜெர்மென் ஷெப்பர்டு, லேப்ரடார் போன்ற வெளிநாட்டு நாய்கள் வரை பங்கேற்கும். அதன் அணிவகுப்பும், விளையாட்டும், பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும்.

விளாங்குடியை சேர்ந்த கண்காட்சி நாய் உரிமையாளர் கே.மணிசங்கர் கூறுகையில், ‘‘வெளிநாட்டு நாய்கள், நாட்டின நாய்கள் விலை உயர்வுக்கு கண்காட்சியே ஒரு முக்கிய காரணம். ஜல்லிக்கட்டில் ஒரு காளை வெற்றிப்பெற்றால் அதன் மதிப்பு உயரும். அதுபோலவே நாய்கள் கண்காட்சியில் பங்கேற்று வெற்றிப்பெறும் நாய்களுக்கும், அந்த பெற்றோர் மூலம் பிறக்கும் குட்டிகளுடைய விலையும் பல மடங்கு விலை உயரும். அதற்காகவே நாய் வளர்ப்பார்கள், தங்கள் நாய்களை பழக்கப்படுத்தி நாய்கள் கண்காட்சிக்கு அழைத்து செல்வதை பொழுதுப்போக்காகவும், ஒரு தொழிலாகவும் கொண்டுள்ளதால் நாய்கள் கண்காட்சிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஆனால், மதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழகத்தில் நடக்கும் நாய்கள் கண்காட்சியில் நாய்களை பங்கேற்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

தேசிய அளவில் பொதுவான கேனல் கிளப் ஆப் இண்டியா சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சிகள் நாய்களுக்கு மிக கடினமாகவும், சவாலாகவும் இருக்கும்.

சிறிய போட்டிகளில் தங்கள் நாய்களை வெற்றிப்பெற்று தரத்தை நிர்ணயித்தப்பிறகே இந்த போட்டிகளில் பங்கற்க முடியும். கண்காட்சியில் நாய்களை அதன் நிலையில் நிறுத்த வேண்டும், ஒரிஜினல் இனமாக, பல் சரியான வரிசையில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாய்க்கும் ஒரு நிலையில் பல் இருக்கும். அது சரியாக இருக்கிறதா என்று பார்க்கப்படும். எந்த எலும்பும் வளைந்து இருக்கக்கூடாது. உணவு ஸ்டேண்டில் வைத்தால் அதை நாய் சரியான நிலையில் நின்று சாப்பிட வேண்டும். கண்காட்சியில் பங்கேற்க ஒவ்வொரு நாய்க்கும், அது எந்த ஊரில் பிறந்தது, அதன் பெற்றோர் உள்ளிட்ட அதன் குடும்ப விவரங்களை உள்ளடக்கிய சான்றினை வழங்க வேண்டும்.

மேலும், இந்த விவரங்கள் அடங்கிய ‘மைக்ரோ சிப்’ நாய் கழுத்தில் அல்லது காலில் இன்சர்ட் செய்ய வேண்டும். கண்காட்சியில் பங்கேற்க வரும் அந்த நாய்களை ஸ்கேன் செய்யும்போது மைக்ரோ சிப் விவரங்களும், சான்றிதழிலில் உள்ள விவரங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். நாயின் முன் கால், காது, வாய் உள்ளிட்டவை குரைக்கும்போது இந்தநிலையில்தான் இருக்க வேண்டும் என்ற பார்முலா கண்காட்சியில் பின்பற்றப்படும்.

அதில் எது ஒத்துப்போகுதோ, அந்த நாய்க்கும் ‘சிறந்த நாய்’ பட்டமும், மெடலும் கொடுப்பார்கள். அதன்பிறகு இந்த நாய்க்கும், இதன் மூலம் பிறக்கும் குட்டிகளுக்கும் மவுசு கூடும்.

இந்த அடிப்படையிலே நாய் கண்காட்சியில் வெற்றிப்பெறும் பெற்றோரின் லேப்ரடார், ராட்வீலர், கிரேட்டேடன், ஜெர்மன் ஷெப்பெர்டு, டாபர்மேன் உள்ளிட்ட நாய் கட்டிகள் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ரூ.5 லட்சம் வரை விற்கப்படுகிறது.

மற்ற நாய்க்குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அதுபோலவே நாட்டின நாய்க் குட்டிகள் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x