

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், மீனவர்களின் படகினை நாட்டுடமையாக்கியும் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி 9 அன்று ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவரது விசைப்படகில் 9 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்ததாக, அதிலிருந்த கிருபை, வளன் கவுசிக், மிக்கேயாஸ், சினிங்ஸ்டன், சாம்ஸ்டில்லர், மிஜான், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவர்களை அந்நாட்டு கடற்கடையினர் கைது செய்துது.
அவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனைக்கு பின்னர் கரோனா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.
திங்கட்கிழமை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் 9 மீனவர்களை விடுதலை செய்து உத்திரவிட்டார்.
மேலும் இவர்களின் விசைப்படகுகினை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படுகிறது என்றும் நீதிபதி தீர்பளித்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் அல்லது கடல் வழியாக தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.