

தூத்துக்குடியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஆணையராக இன்று பொறுப்பேற்ற சரண்யா அரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வி.பீ.ஜெயசீலன், சென்னை சர்வே மற்றும் நில ஆவணம் பிரிவு கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டபள்ளார்.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த சரண்யா அரி, தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து சரண்யா அரி இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் ஜெயசீலன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தொடர்ந்து புதிய ஆணையர் சரண்யா அரி அதிகாரிகளுடன் மாநகராட்சி பிரச்சினைகள், பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள சரண்யா அரி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். 2016-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்தார். தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இவரது கணவர் விஷ்வேஷ் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் துறை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
பொறுப்பேற்ற பிறகு ஆணையர் சரண்யா அரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தார்கள். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முழு முயற்சி எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.