Published : 08 Feb 2021 02:29 PM
Last Updated : 08 Feb 2021 02:29 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறு வழித்தடப் பிரதான சாலை: முதல்வர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டத்தில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தடப் பிரதான சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இதுதொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (8.2.2021) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம்கட்டமாக 1,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான சாலையினைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களைக் கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரித்தல் போன்ற பணிகளைத் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட, சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக 1,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி (தேசிய நெடுஞ்சாலை 716) முதல் பாடியநல்லூர் (தேசிய நெடுஞ்சாலை 16) வழியாக திருவொற்றியூர் - பொன்னேரி- பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான சாலையினைத் தமிழக முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையில் 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளுக்கான 94 தட்டச்சர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாகத் தமிழக முதல்வர் இன்று 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ரெ.கோதண்டராமன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஒய்.ஆர்.பாலாஜி, ஜி.வி.ஆர். மற்றும் அசோகா நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x