Published : 08 Feb 2021 12:44 PM
Last Updated : 08 Feb 2021 12:44 PM

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டுவிட்டார்: தமிழகத்தில் நடக்க வேண்டியது நடக்கும் - மு.க.ஸ்டாலின் கருத்து

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

புதுக்கோட்டை

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டுவிட்டார், இனிமேல், தமிழகத்தில் நடக்க வேண்டியது நடக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று (பிப். 8) நடைபெற்ற திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் த.சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது:

"தமிழகத்தில் 3 மாதத்தில் திமுக ஆட்சியில் அமர உள்ளது. அதற்கு அடிப்படையாக அனைத்து தொகுதிகளிலும் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என திமுக வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இன்று மாலை சிவகங்கையுடன் 2-ம் கட்ட பிரச்சாரம் நிறைவடைகிறது. மொத்தம் 71 தொகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. 12-ம் தேதி 3-ம் கட்ட பிரச்சாரம் தொடங்க உள்ளது.

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஏற்கெனவே தெரிவித்து இருந்தேன். ஆனால், தற்போதைய சூழலைப் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தவழ்ந்து வந்து தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி வந்தாரா? இல்லையா?. இதை அவர் மறுத்தால் எனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டுவிட்டார். என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆனால், நடக்க வேண்டியது நடக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை".

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x