Last Updated : 07 Feb, 2021 06:04 PM

 

Published : 07 Feb 2021 06:04 PM
Last Updated : 07 Feb 2021 06:04 PM

தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டுகளை வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி, தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (50). தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

அதில் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களாக கையெழுத்திட்டு வருகிறார்.

அதன்படி, இன்று காலையில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் கையெழுத்திட காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி காவல் நிலையத்திதுக்குள் செல்ல முயன்றபோது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு 2 வெடி குண்டுகள் விழுந்து வெடித்தன. குண்டு வீச்சில் இருந்து கண்ணபிரானும், அவரது ஆதரவாளர்களும் காயங்களின்றி தப்பினர்.

சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போலீஸார், மர்ம நபர்களை துரத்தினர். உடனடியாக அந்த நபர்கள் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுவிட்டனர். அப்போது ஒரு வெடிகுண்டு சாலையில் விழுந்து வெடித்துள்ளது. மற்றொரு வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து வெடிகுண்டு சிதறல்களை சேகரித்தனர்.

மேலும், வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகுண்டையும் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். வெடித்த குண்டுகளில் கருங்கல் துகள்கள், சிறிய இரும்பு குண்டுகள் இருந்தது தெரியவந்தது.

தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

வெடிகுண்டு வீச்சில் இருந்து தப்பிய கண்ணபிரான் கூறும்போது, “ஏற்கெனவே என் மீதும், எனது அமைப்பினர் மீதும் தாக்குதல் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், போலீஸார் உஷார்படுத்தப்பட்டு, வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. காவல் நிலையம் முன்பு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x