Last Updated : 07 Feb, 2021 03:14 AM

 

Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

விழுப்புரம் வேலைவாய்ப்பு முகாமில் 14,407 காலிப் பணியிடங்களுக்கு1,204 இளையோர் தேர்வு

தமிழகத்தில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை, ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ ஆக கடைபிடிக்கப்பட்டு வேலையில்லாத இளையோருக்கு தனியார் துறை மூலம் வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரப்படுகின்றன.

அந்த வகையில் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையத்தில் நேற்று முன்தினம் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 10-ம் வகுப்பு தொடங்கி பொறியியல் பட்டப் படிப்பு வரை பயின்ற2,973 பேர் பங்கேற்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இதை நடத்தியது.

இத்தனியார் வேலை பங்களிப்பு முகாமில் வங்கி, மோட்டார் வாகன உதிரிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், காப்பீடு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் என 86 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 14 ஆயிரத்து 407 பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய இலக்கு நிர்ணயம் செய்திருந்தன இந்நிறுனங்கள்.

ஆனால், 2,973 இளையோர் மட்டுமே இம்முகாமில் பங்கேற்றனர். இவர்களில் தனித்திறனுடன் இருந்த 478 பேருக்கு உடனே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 726 பேர் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களைத் தேர்வு செய்த நிறுவனங்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அவர்களை அழைத்திருப்பதாக தெரிவித்துள்ளன. இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். அவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்றாலும் 1,204 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

விழுப்புரத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் இந்நிறுவனங்கள் தேர்வு செய்ய விரும்பிய நபர்கள் 14 ஆயிரத்து 407 பேர். இதில் பங்கேற்றது 2,973பேர். மொத்த எதிர்பார்ப்பில் வந்தது 21 சதவீதம் பேர் தான். வந்தவர்களில், அதாவது 2,973 பேரில் 1,204 (40 சதவீதம்) பேரே தகுதி வாய்ந்தவர்களாக தேர்வாகி யிருக்கின்றனர்.

“இன்னும் இன்னும் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எங்களுக்கு நல்ல மனிதவளம் தேவைப்படுகிறது. ஆனால், திறன் குறைந்த நபர்களை எங்களால் தேர்வு செய்ய இயலாது” என்று முகாமில் பங்கேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இம்முகாம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறிவழிகாட்டும் மையத்தின்உதவி இயக்குநர் பாலமுருகனிடம்கேட்ட போது, “முகாமில் பங்கேற்ற வர்களில் பெரும்பாலானோர் கல்லூரி, தொழிற்பயிற்சி மையத்தில் இறுதியாண்டு படிப்பவர்கள். இந்த முகாமில் பங்கேற்றது அவர்களுக்கு நல்ல ஒரு அனுபவம்.

அவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள். முகாமிற்கு வந்தவர்களில் 76 பேர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் திறன் பயிற்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x