Published : 06 Feb 2021 06:47 PM
Last Updated : 06 Feb 2021 06:47 PM

முதல்வர் பழனிசாமி - ராமதாஸ் சந்திப்பு ஒத்திவைப்பு

சென்னை

முதல்வர் பழனிசாமியை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பார் என்கிற தகவல் வெளியான நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடக்கும் என்கிற தகவல் வெளியானது.

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாமக இணைந்தது. அந்தத்தேர்தலில் பாமக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.

பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்த கூட்டணி அதன் பின்னர் தொய்வு ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதா என்கிற கேள்விக்கு இருபக்கமும் உரிய பதில் இல்லாமல் இருந்தது.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அவர்கள் கட்சியின் முடிவு என பாமக தலைவர் ஜி.கே.மணி பட்டும்படாமல் பதிலளித்தார்.

இதனிடையே வன்னியர்களுக்கு 20% உள் ஒதுக்கீடு கோரி 5 கட்ட போராட்டத்தை ராமதாஸ் அறிவித்தார். போராட்டம் தீவிரமாக நடக்கும் என்று தெரிவித்தார்.

முதல்வரிடம் இட ஒதுக்கீடு கோரி அன்புமணி நேரில் மனு அளித்தார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று ராமதாஸ் அறிவித்திருந்தார்.

இதனிடையே ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

பின்னர் அமைச்சர் தங்கமணி வீட்டில் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அது தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சு என பேசப்பட்டது.

ஆனாலும் உள் ஒதுக்கீடு விவகாரம் குறித்த ராமதாஸ் கருத்து காரணமாக அது முடிவுக்கு வராமல் எப்படி கூட்டணி என்கிற சந்தேகமும் எழுந்தது.

இதனிடையே இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் பழனிசாமியுடன் ராமதாஸ் சந்திப்பதாக இருந்தது. இந்தச் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த விஷயங்கள் பேசப்படும் எனத் தகவல் வெளியானது.

ஆனால் திடீரென அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x