Published : 06 Feb 2021 12:14 PM
Last Updated : 06 Feb 2021 12:14 PM

சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைனில் நடக்கும்: ஜூன் மாதத்திற்கு பிறகே நேரடி வகுப்பு

சென்னை

சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என்றும், ஜூன் மாதத்தில் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடக்கும் என்றும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து முதுநிலை வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வந்தது. பின்னர் இளநிலை கல்லூரிகளும் திறக்கப்பட்டு விடுதிகளும் திறக்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்திலும் அவ்வாறே வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதில் தங்கும் விடுதியில் மூடப்பட்ட மாதங்களுக்கும் கட்டணம் கேட்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஜனவரி 18-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. உரிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிகளுக்கு உறுதியாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், முதல்வர் ஊரடங்கை நீட்டித்து வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவித்தார். மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேபோல, பிப்ரவரி 8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சென்னை பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்

அதில் "சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே தொடர்ந்து ஜூன் மாதம் வரை நடைபெறும். ஜூன் மாதத்திற்குப் பிறகே நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். செய்முறை தேர்வுகளுக்காக மட்டுமே மாணவர்கள் நேரடியாக வரலாம். சந்தேகங்களை ஆசிரியர்களிடமோ, பல்கலைக்கழகத்து நேரில் வந்தோ மாணவர்கள் கேட்கலாம். மாணவர்களுக்கு தரமணியில் விடுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பல்கலைகழகம் திறக்கப்பட்டு விடுதிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரிலிருந்து சென்னை வந்து விடுதியில் மாணவர்கள் தங்கி கல்லூரிக்கும் செல்லும் நிலையில் தற்போது பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை பல்கலைக்கழகம் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x