Published : 06 Feb 2021 11:30 AM
Last Updated : 06 Feb 2021 11:30 AM

ரமலான் பண்டிகை அன்று சிபிஎஸ்இ தேர்வு; தேதியை மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வு நடக்காமல் இருக்கும் பொருட்டு தேர்வுத் தேதியை மாற்றி அமைக்கவேண்டும் என் சு.வெங்கடேசன் எம்.பி மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு மார்க்சிசிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

"ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும். ஆகவே ரமலான் திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கிற் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது.

ரமலான் தேதிகள் மாறுகிற பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது சிபிஎஸ்இ-க்கு அழகல்ல எனச் சுட்டிக் காட்ட விழைகிறேன். ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு கடிதத்தில் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x