Published : 01 Nov 2015 05:07 PM
Last Updated : 01 Nov 2015 05:07 PM
பாடகர் கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரியும், மதுவினால் ஏற்படும் கேடுகளை விளக்கியும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சார்ந்த பாடகர் கோவன் ,பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்துள்ளார். அதற்காக அவரை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கோவன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசத் துரோகம், சமூகப் பதட்டத்தை உருவாக்குதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான, இத்தகைய நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் போல், தமிழக அரசின் நடவடிக்கைகளும் உள்ளன. ஏராளமான திரைப்படப் பாடல்கள், கவிதைகள், கருத்துரைகளில் மதுவின் தீமைகள் பற்றி அறிவியல் ரீதியான பதிவுகள் உள்ளன. எனவே, கோவன் மீது போடப் பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT