Published : 05 Feb 2021 07:15 PM
Last Updated : 05 Feb 2021 07:15 PM

வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மைய மண்டல அலுவலகம் சென்னையில் திறப்பு: ஏற்றுமதியாளர்கள் தொடர்பு கொள்ளலாம் 

சென்னை

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபிடா), வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியினை ஊக்குவித்து மேம்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு, தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல அலுவலகத்தினைத் தமிழ்நாட்டில் உருவாக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வந்ததையடுத்து, அபிடா அமைப்பின் மண்டல அலுவலகம் கிண்டி, திருவிக தொழிற்பேட்டையில் இயங்கும் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய வளாகத்தில், அபிடா அமைப்பின் தலைவர் அங்கமுத்துவால் திறந்து வைக்கப்பட்டது.

பல்வேறு வேளாண் மண்டலங்களை உள்ளடக்கிய நமது மாநிலத்தில் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 70% மக்கள் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டு மாநிலத்தின் பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகின்றனர்.

தமிழக அரசின் தொடர் முயற்சியினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டில் நெல், நிலக்கடலை, சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், நறுமணம் மற்றும் வாசனை பயிர்கள், தோட்டப்பயிர்கள், மலர்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் பெருவாரியாகப் பயிரிடப்படுகின்றன.

தற்போது பாசுமதி அல்லாத இதர அரிசி வகைகள், காய்கறிகள், மாம்பழம் மற்றும் மாம்பழக் கூழ், கொய் மலர்கள், உலர் மலர்கள், அப்பளம், கெர்கின்ஸ், கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் பெருமளவில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல அலுவலகம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டதன் மூலம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் நன்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபிடா மண்டல அலுவலகம் பின்வரும் முகவரியில் இயங்கி வருகிறது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல அலுவலகம் இரண்டாம் தளம்,
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையரக வளாகம்,
திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32.
மொபைல் எண்: 99865 93017

வேளாண்மை மற்றும் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் மேற்கண்ட மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, உரிய உதவிகள் பெற்று பயன் அடையலாம்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x