திருச்சியில் தொடர்ந்து 4-வது நாளாக சாலை மறியல்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 100 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

திருச்சியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்று சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

"பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக் காலமாக அறிவித்து அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க அறிவித்த அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.2-ம் தேதி முதல் தொடர் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிப். 2, 3, 4 ஆகிய 3 நாட்களாகத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுக் கைதாகி வந்தனர்.

இந்நிலையில், 4-வது நாளாக இன்று (பிப்.05) போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் எம்.ஜீவானந்தம், ஆர்.சத்தியவாணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன், மாவட்டத் தலைவர் என்.பி.விவேகானந்தன், மாவட்டச் செயலாளர் பி.பழனிச்சாமி உட்பட 74 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும். இது தொடர்பாக சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சங்கத்தின் மாநில மையம் அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in