Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

கரோனா தடுப்பூசி போட்டு கொள்வதில் வரும் 7-ம் தேதி வரை முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை: தமிழக சுகாதாரத் துறை செயலர் தகவல்

சென்னை

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முன்களப் பணியாளர் களுக்கு வரும் 7-ம் தேதி வரை முன்னுரிமை வழங்கப்படும் என தமிழகசுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதில் தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது பிற துறையில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக உள்ளாட்சிஅமைப்புகளில் பணி செய்பவர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழக உள்ளாட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையர் திவ்யதர்ஷினி ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதில், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் ஒரு நாளுக்கு 500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது திருப்திகரமாக இல்லை. தஞ்சாவூரில் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் என்ன நடந்தது என பார்த்தோம். இதனால் மக்கள் விழிப்புணர்வோடு முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த 166 மையங்கள் தொடங்கி, தற்போது 400-க்கும்மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் வரும் 7-ம் தேதி வரை முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் கொடுக்கலாம் என மத்திய அரசு கூறினால் அதன் பின் அவர்களுக்கு முன்னுரிமை கிடையாது. மேலும், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், நீதித் துறையினர், மக்கள் பிரநிதிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் முன்களப்பணியாளர்கள் 2.62 லட்சம் பேர் உள்ளனர். அதில், 1.14 லட்சம் காவல்துறையினரும், 1.06 லட்சம் உள்ளாட்சி அமைப்பினரும் உள்ளதாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசியைப் பெற ஆர்வமுடன் உள்ளனர். இதனால் விரைவில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x