

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் கடந்த 2014- ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக
லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் அமைச்சர் மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பிலும் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று காணொலி காட்சியில் விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.