

அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்த முன்களப் பணியாளரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் புதூர் பேரூராட்சியில் முன்களப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர் மனோகரன். இவர் ஜனவரி 21-ல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஜன. 30-ல் அருப்புக்கோட்டைக்கு பேருந்தில் வந்த மனோகரன், புதிய பேருந்து நிலையில் பேருந்திலிருந்து இறங்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மனோகரன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் மனோகரன் உடலை ஜிப்மர் அல்லது எய்மஸ் மருத்துவக்குழு மறு பிரேதப் பரிசோதனை செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி மனோகரன் மனைவி அம்பிகா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், மனோகரன் உடல் 2015-ம் ஆண்டின் பிரேத பரிசோதனை விதிப்படி பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. எனவே மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து, மனோகரன் உடல் 2015-ம் ஆண்டின் பிரேதப் பரிசோதனை விதிப்படி பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், அது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
2015-ம் ஆண்டின் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மனோகரன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.