Published : 04 Feb 2021 04:27 PM
Last Updated : 04 Feb 2021 04:27 PM

தேனி, ஈரோடு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகள், ஒரு பாலம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், தேனி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

மேலும், கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கட்டப்படவுள்ள அணைக்கட்டுகள், தடுப்பணைகள், தூண்டில் வளைவுகள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (பிப். 04) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கிவைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், சண்முகசுந்தராபுரம் கிராமத்தின் அருகில் நாகலாறு ஓடையின் குறுக்கே 2 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, போடிநாயக்கனூர் வட்டம், போடிநாயக்கனூர் கிராமம் அருகில் சின்னாற்றின் குறுக்கே 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் மாணிக்காபுரம் கிராமத்தின் அருகில் சுத்தகங்கை ஓடையின் குறுக்கே 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், வேட்டைபெரியாம்பாளையம் கிராமம் அருகில் பவானி பிரிவு வாய்க்காலில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், என மொத்தம் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

மேலும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விஸ்வநாதபுரம் கிராமம் அருகே பெண்ணையாற்றின் குறுக்கே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை மற்றும் மேல்குமாரமங்கலம் கிராமம் அருகே பெண்ணையாற்றின் குறுக்கே 37 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அணைக்கட்டு; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மருதேரி கிராமம், அகரம் - மருதேரி பாலத்தின் அருகே பெண்ணையாற்றின் குறுக்கே 10 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள படுகை அணை; திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம், இருனாப்பட்டு கிராமம், பாம்பாற்றின் குறுக்கே 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை; விருதுநகர் மாவட்டம், வெம்பகோட்டை வட்டம், சங்கரபாண்டியபுரம் கிராமம், வல்லம்பட்டி ஓடையின் குறுக்கே 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை; கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம் கொங்கராயபாளையம் - கண்டாச்சிமங்கலம் கிராமங்களின் அருகே மணிமுக்தா ஆற்றின் குறுக்கே 8 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நீர் செறிவூட்டு கட்டுமானம் அமைக்கும் பணி; தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆலந்தலை கிராமத்தில் 52 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தூண்டில் வளைவு; கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், பூத்துறையில் 14 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தூண்டில் வளைவு என மொத்தம் 156 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 8 திட்டப் பணிகளுக்குதமிழ்நாடு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x