Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வாட்ஸ்அப் பிரச்சாரத்தை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறியதாவது: நாட்டிலேயே தொழில்நுட்ப பிரிவு என்ற ஒன்றை முதன்முதலில் அமைத்த கட்சிகளில் அதிமுகவும் ஒன்று. நமது மாநிலத்தின் வாக்காளர்களில் பெரும்பாலானோர் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். அதிமுக, தனது தொழில்நுட்ப பிரிவின் உட்கட்டமைப்பு மற்றும் அதன் பணியாளர்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அத்துடன், மக்களோடு இயங்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ‘அம்மாவின் நல்லாட்சி தொடர’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ம் தேதிக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் 150 வாட்ஸ்அப் குழுக்கள் வீதம் உருவாக்கப்பட உள்ளது. இந்த குழுக்கள் தங்கள் தொகுதியிலுள்ள மக்களுக்கு அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து தெரிவித்து அவர்களின் மதிப்புமிக்க கருத்துகளை சேகரிக்கும்.
பொதுமக்கள் 8300234234 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு “AMMA” என டைப் செய்து அனுப்புவதன் மூலம் அவர்கள் தொகுதிக்கான குழுவில் இணையமுடியும். இது அதிமுக அரசின் சாதனைகளை பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் மையமாக இருந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT