

சென்னையில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் செயல்பட்டு வரும் மழை நிவாரண முகாமை மத்திய உள்துறை இணை செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான மத்திய குழு நேற்று பார்வையிட்டது. அப்போது, இந்த மக்களுக்கு அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து இலவசமாக 3 வேளை உணவு வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.
அம்மா உணவகத்தை பார்வையிட விரும்புவதாக மத்திய குழுவினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அருகில் இருந்த அம்மா உணவகத்துக்கு மத்திய குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு இட்லி, பொங்கல் ஆகியவற்றை சுவைத்த மத்திய குழுவினர் மிகவும் சுவையாக இருப்பதாக தெரிவித்தனர். பணியில் இருந்தவர் களிடம், 3 வேளையும் சமைக்கப்படும் உணவுகள் மற்றும் அவற்றின் விலை விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனையா என ஆச்சரியம் அடைந்தனர். பின்னர் அம்மா உணவகத்தின் நோக்கம், செலவினம், தினசரி விற்பனையாகும் அளவு குறித்து ஆணை யர் விக்ரம் கபூர் மத்திய குழுவுக்கு விளக்கினார்.