Last Updated : 03 Feb, 2021 09:59 PM

 

Published : 03 Feb 2021 09:59 PM
Last Updated : 03 Feb 2021 09:59 PM

தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு கேட்டு வருபவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்: அமைச்சர் ஜி.பாஸ்கரன்

காளையார்கோவிலில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகளை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதனன் ரெட்டி.

சிவகங்கை

‘‘தேர்தல் நேரத்தில் வண்ணக் கொடி கட்டிக் கொண்டு வாக்கு கேட்டு வருபவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நல வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், சாலூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச அசின் நாட்டு கோழிகுஞ்சு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார்.

பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கி அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது: நான் உள்ளூரில் வசிப்பதால் மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன்.

தேர்தல் வந்துவிட்டால் யாரெல்லாமோ வண்ண, வண்ண கொடிகளை கட்டிக்கொண்டு வாக்கு கேட்டு வரத்தொடங்கிவிடுவர். ஆனால் அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.

விவசாயியான முதல்வர் பழனிசாமி மக்களுக்குth தேவையான அனைத்தையும் செய்வார். சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி குடிநீர் பஞ்சம் வராது, என்று தெரிவித்தார்.

இதைபோல் கல்லல் அருகே வேப்பங்குளத்தில் தனியார் நிறுவனம் திறப்பு விழாவில் அமைச்சர் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் அழிந்து வருகிறது. அதனால் தொழில்கள் கொண்டு வருவதில் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஒரு முறை முதல்வரிடம் ‘ நீங்கள் உங்கள் பகுதிக்கே தொழிற்சாலைகள் கொண்டு செல்கிறீர்கள்.

எங்கள் பகுதிக்கும் தொழில்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,’ என்று கூறி சண்டையிட்டேன்.

விரைவில் சிவகங்கை அருகே அரசனூரில் 300 ஏக்கரில் தொழில் பூங்கா தொடங்கப்பட உள்ளது., என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x