Published : 03 Feb 2021 05:00 PM
Last Updated : 03 Feb 2021 05:00 PM

உரிமை கோரப்படாத உடல் எரிக்கப்படுகிறதா? புதைக்கப்படுகிறதா?- காரணங்களுடன் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உயிரிழக்கும் நபர்களில் உரிமை கோரப்படாமல் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள உடல் புதைக்கப்படுகிறதா? எரிக்கப்படுகிறதா? எனத் தகுந்த காரணங்களுடன் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் மரணமடையும் நபர்களின் உடல்கள், அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டு, 10 நாட்களுக்குப் பின் அவற்றை உரிய நடைமுறைகளைப் பின்பற்றிப் புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, “அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்கள் மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்தச் சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்ய பிற மாநில நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளன. தமிழகத்தில் வழக்குகளைக் காரணம் காட்டி, புதைக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தகனம் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சடலங்களின் முடி, ரோமம், நகம் ஆகியவற்றை எடுத்துப் பாதுகாக்கப்படுவதால், அடையாளம் காண்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. தகனம் செய்வதால் அதிகச் செலவும் ஏற்படாது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் இரு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், பிரேதப் பரிசோதனை முடிந்த 10 நாட்களுக்குப் பின், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் மூலம் சடலங்கள் புதைக்கப்படுகின்றன. சில சடலங்கள் கல்விப் பயன்பாட்டுக்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உடல்களை தகனம் செய்வது என்பது மதம் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் சடலங்கள் புதைக்கப்படுகின்றன என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, உரிமை கோரப்படாத உடல் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x