Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு, கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உட்பட 88 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்திய அரசுப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சார்பில்அதிகாரிகளின் திறன் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் பயிற்சிகளில் ஈஷாவின் ‘‘இன்னர் இன்ஜினீயரிங் லீடர்ஷிப்’’ பயிற்சியும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் அரசு அதிகாரிகள், ஈஷாவின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். அதன்படி, இந்தாண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா’ என்ற சக்தி வாய்ந்த யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது.
உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோகா பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அத்துடன், சத்குருவுடனான தியான அமர்வுகளிலும், கலந்துரையாடல் நிகழ்விலும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். அரசு அதிகாரிகள் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை சரியாக கையாள்வது, உள்நிலையில் அமைதியையும் முழுமையையும் உணர்வது, மற்றவர்களுடனான நட்புறவை மேம்படுத்துவது, மனதில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலையை உருவாக்கி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவது போன்றவை பயிற்சி வகுப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும் என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT