சென்னை மக்களுக்கு டிவிஎஸ், ஹுண்டாய் நிவாரண உதவி

சென்னை மக்களுக்கு டிவிஎஸ், ஹுண்டாய் நிவாரண உதவி

Published on

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு டிவிஎஸ், ஹுண்டாய் ஆகிய நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கின.

வட கிழக்கு பருவமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அரசு, அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், டிவிஎஸ் மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் எனப்படும் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு பணிகளின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை செய்தன.

சென்னை அம்பத்தூர், பட்டரவாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், கோட்டூர்புரம், சூளைமேடு, சைதாப்பேட்டை, காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளில் 38 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு உணவு வகைகளை டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தப் பணிகளில் 100-க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஹுண்டாய் நிறுவனமும் நிவாரண உதவிகளை வழங்கியது. அந்நிறுவனம் சார்பில் எட்டிக்குத்திமேடு, அக்கமாபுரம், வெள்ளறை, கடுவஞ்சேரி, கேகே நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு 1,000 பாய்கள், 1,000 போர்வைகள், 2,000 பிஸ்கட் பாக்கெட்டுகள், 20 லிட்டர் தண்ணீர் குடுவைகள் 500 ஆகியவை வழங்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in