

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களின் உறுதித் தன்மையையும், சமீபத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களின் விதிமீறல்களையும் உள்ளூர் திட்டக்குழுமமும், மாநகராட்சியும் ஆய்வு செய்யாமல் இருப்பதால் அடுத்தடுத்து பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுவதும், தீ விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாரம்பரிய பழமையான மதுரை நகரம், உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.
இக்கோயிலை சுற்றி 40 முதல் நூற்றாண்டு பழமை வாய்ந்த வீடுகள், வணிக கட்டிடங்கள் உள்ளன. கடந்த காலத்தில் வீடுகளாக இருந்த பல கட்டிடங்கள், தற்போது வணிக கட்டிடங்களாக வாடகைக்குவிடப்பட்டுள்ளன.
பல பழமையான கட்டிடங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் ஆபத்தானநிலையில் செயல்படுகின்றன. எதிர்பாராதவகையில் தீ விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வெளியேற அவசர வழிகள் இல்லை.
தீயணைப்பு வாகனங்கள், மீட்பு வாகனங்களும் தாராளமாக வந்து செல்ல முடியாத இடங்களிலே வணிக நிறுவனங்கள், வீடுகள் அமைந்துள்ளன.
கடந்த தீபாவளி பண்டிகை நேரத்தில் விளக்கத்தூன் அருகில் நவபத்கானா தெருவில் உள்ள ஜவுளிக்கடை கட்டிடம் தீ விபத்தில் இடிந்து தீயை அணைத்துக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீது விழுந்தது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். நேற்று மதுரை மேலமாசி வீதி அருகே மேலவடம்போக்கி தெருவில் 80 ஆண்டு பழமையான வீடு புதுப்பிக்கும்பணி நடந்தபோது, கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடிக்கடி பழமையான கட்டிடங்கள் புனரமைக்கும்போது இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன.
உள்ளூர் திட்டக்குழுமமும், மாநகராட்சியும் நிர்ணயித்துள்ள கட்டிட விதிமுறைகள், மீனாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டார வியாபார நிறுவனங்களுக்கும் பொருந்தாது என்று சொல்லுகிற அளவிற்கு இப்பகுதி கட்டிடங்கள் வரைமுறையில்லாமல் செயல்படுகின்றன.
அதுபோல், 60 ஆண்டிற்கு முந்தைய கட்டிடங்கள் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி அதிகம் உள்ளன. இந்த கட்டிடங்களில் உறுதித்தன்மையை ஆராயாமலேயே அந்தக் கட்டிடங்கள் வாடகைக்கவிடப்படுகின்றன. புனரமைக்கப்படுகின்றன.
அதனால், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் உறுதித்தன்மையையும், விதிமீறல் கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பொதுவாக வீடு, கடை, திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவோர் அதன் சதுர அடியை பொறுத்து மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் கட்டிட வரைபட அனுமதி பெற வேண்டும்.
ஆனால், சாதாரண வீடுகள் முதல் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் வரை யாரும் வரைபடத்தில் இருக்கிறபடி கட்டிடங்கள் கட்டுவதில்லை. கட்டிடங்கள் உறுதித்தன்மை, பார்க்கிங் வசதி, வரைப்பட விதிமீறல் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சென்று ஆய்வு நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் வருகின்றனர்.
அவர்களை மீறி கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. வரைபட அனுமதியை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு அதன் விதிமுறைமீறல்களுக்கு தகுந்தவாறு அபராதம் மட்டும் விதித்துவிட்டு, வரியை நிர்ணயிக்கின்றனர், ’’ என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘முன்பு தீ விபத்து நடந்த கட்டிடம் அனுமதி பெற்றுதான் கட்டியுள்ளனர். எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
அதுபோல், நேற்று இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அதன் உரிமையாளர் மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் கட்டிட அனுமதி பெற்றுதான் புனரமைத்தனர்.
அவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் விபந்து நடந்துள்ளது. போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். விதிமீறல் கட்டிடங்கள், கட்டிடங்களின் உறுதித்தன்மையை மாநகராட்சியும், உள்ளூர் திட்டக்குழுமமும் இணைந்துதான் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ’’ என்றார்.